பேராசிரியர்கள் மற்றும் பிற பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 161 நபர்களுக்கு பணிநியமன ஆணை!!

 
ttn

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பிற பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 161 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

stalin

 தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (3.5.2023) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பிற பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 161 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர் கல்வியை பயில்வதற்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித் தொகை வழங்குதல், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.

anna

அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி. கல்லூரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கட்டடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி (School of Architecture & Planning) ஆகிய நான்கு கல்லூரிகளிலும் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் உடற்கல்வி துணை இயக்குநர், துணை நூலகர் போன்ற பிற பணியாளர் பணியிடங்களுக்கு எட்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளிப்படைத் தன்மையுடன் தேர்வு குழுக்களால் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு 20.04.2023 அன்று நடைபெற்ற கூட்டத்தில் அண்ணா பல்கலைகழக ஆட்சி மன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட 161 உதவி பேரசிரியர்கள், இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பிற பணியாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.