எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை - இறந்த ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை!
எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்திலேயே உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் பணிபுரிந்து பணி காலத்திலேயே இயற்கை எய்திய 4 அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் இன்று வழங்கினார். முதுநிலை தட்டச்சு கம்மியர் ஆக பணிபுரிந்து வந்த அரசு பணியாளர் உயிரிழந்த நிலையில் அவரின் வாரிசுதாரர் ஆன கோபி என்பவருக்கு இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேப்போல காலங்குறிப்பவர் ஆன சிவலிங்கம் மறைவையொட்டி அவரது வாரிசுதாரரான சுரேஷ்குமாருக்கு அலுவலக உதவியாளர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன் ஆகியோரின் மறைவை ஒட்டி அவர்களது வாரிசுதாரர்களுக்கு சித்ரா, புவனேஸ்வரி ஆகியோருக்கு அலுவலக உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையர் மற்றும் துணை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.