ஓடும் ரயிலில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை- ராணுவ ஊழியருக்கு 8 ஆண்டுகள் சிறை

 
n n

ஓடும் ரெயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரருக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

உத்தரப்பிரசேதம் மாநிலம் ஆக்ரா திகருவாடா கிராமத்தை சேர்ந்தவர் யோகேந்திரசிங்பயில்வார் (32). இவர் ஊட்டியில் உள்ள வெலிங்டன் ராணுவக் கல்லுாரியில் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு கோவையிலிருந்து திருப்பதிக்கு செல்ல ஜனவரி மாதம் 22-ந் தேதி  திருவனந்தபுரத்திலிருந்து ஹைதராபாத் வரை செல்லும் ரெயிலில் பயணம் செய்துள்ளார். அதே பெட்டியில் கேரள மாநிலம் காயக்குளத்தைச் சேர்ந்த ஒருவர் தனது 13 வயது மகள் மற்றும் குடும்பத்துடன் பயணம் செய்தார். தீடிரென நள்ளிரவில் அந்த 13 வயது சிறுமிக்கு, யோகேந்திரசிங்பயில்வார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி கூச்சல்லிட்டுள்ளார். சத்தம் கேட்டு கண்விழித்த சக பயணிகள் சிறுமிக்கு யோகேந்திரசிங்பயில்வார் பாலியல் தொல்லை கொடுத்ததை அறிந்து அவரை பிடித்து காட்பாடி ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். 

இதுதொடர்பான புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இவ்வழக்கில்  கடந்த 26-ந் தேதி தீர்ப்பு வழங்க வேண்டி இருந்த நிலையில் யோகேந்திரசிங்பயில்வார் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவில்லை. இதனையடுத்து அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, கோர்ட்டில் சரணடைய ஒருநாள் அவகாசமும் வழங்கப்பட்ட நிலையில். அவர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராக வில்லை. இந்நிலையில் விசாரணை முடிந்த நிலையில் யோகேந்தர் சிங் மீதான குற்றச்சாட்டு  நிரூபிக்கப்பட்டதால், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தும். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் 5 ஆண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் என, மொத்தம் 8 ஆண்டு சிறை தண்டனையும், 35 ஆயிரம் ரூபாய் அபராதமும்  விதித்து வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.