திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்.. மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் உத்தரவு..
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து நடந்த பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் ஆஜராகாததால் மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
மயிலாடுதுறையில் கடந்த 2003ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கு விசாரணை மயிலாடுதுறையில் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது திருமாவளவன் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து வழக்கில் ஆஜராகாத திருமாவளவனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்.விஜயகுமாரி உத்தரவு பிறப்பித்தார்.

வழக்கறிஞர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, வழக்கு தொடர்பாக திருமாவளவன் தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்யாததால் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்த நீதிபதி விஜயகுமாரி, வழக்கை ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


