ஆசாராம் பாபுவுக்கு ஜூன் 30 வரை ஜாமீன் நீட்டிப்பு..!
Mar 29, 2025, 06:45 IST1:15:13 AM

86 வயதான ஆசாராம் பாபுவுக்கு இடைக்கால ஜாமீனை நீட்டித்துள்ளது குஜராத் உயர் நீதிமன்றம். மருத்துவ காரணங்களுக்காக அவருக்கு ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆசாராம் பாபு தனது ஆசிரமத்தில் இளம் பெண் ஒருவரை 2013-ல் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அவருக்கு ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து அவர், ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மருத்துவ காரணங்களுக்காக அவருக்கு கடந்த ஜனவரி மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.
வரும் 31-ம் தேதியுடன் அவரது ஜாமீன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் அவரது தரப்பில் ஜாமீனை 6 மாத காலம் நீட்டிக்க கோரி மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்து நீதிபதிகள் வெள்ளிக்கிழமை அவரது ஜாமீனை மேலும் மூன்று மாத காலம் நீட்டித்தனர்.