சிவகங்கை மாவட்டத்தில் 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 9 பெண்கள் உட்பட 11 பேர் பலி!

 
Q Q

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகேயுள்ள கும்மங்குடியில் இன்று மாலை இரண்டு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய சம்பவம் நடந்தது. ஒரு பஸ் திருப்பூரில் இருந்து காரைக்குடி சென்று சென்றுள்ளது. எதிர் திசையில் இன்னொரு அரசு பஸ், திண்டுக்கல் நோக்கி வந்துள்ளது.இரு பஸ்களும், திருப்புத்துார் சாலையில், சமத்துவபுரம் அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டன. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில், இரு பஸ்களில் பயணித்த 9 பேர் அதே இடத்தில் பலியாகினர். பயணிகளில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்களும், போலீசாரும் இணைந்து மீட்பு பணி மேற்கொண்டனர். காயம் அடைந்தவர்கள், அருகேயுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் இருவர் பலியாகியுள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

இந்த கோர விபத்தில், 9 பெண்கள், ஒரு டிரைவர் உட்பட 11 பேர் பரிதாபமாக பலியாகினர். படுகாயமடைந்த சுமார் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது