அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்.. இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்..
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 3 மீனவர்கள் மீது இடங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதலை நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேதாரண்யம் அருகே கோடிக்கரைக்கு கடல் பகுதியில் புஷ்பவனம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் , நாகமுத்து , ராஜேந்திரன் ஆகிய 3 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே 8 கடல் மைல் தொலைவில் நாட்டுப்படகில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களைச் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். ரப்பர் கட்டை, இரும்பு கம்பி, அரிவாள் போன்ற ஆயுதங்களை கொண்டு 3 மீனவர்களையும் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த 3 மீனவர்களும், இன்று காலை ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். இஒதனையடுத்து அவர்கள் 3 பேரும் வேதாரண்யம் அர்சு மருத்டுவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சுமார் 300 கிலோ எடைகொண்ட மீன்பிடி வலை, செல்போன் , பேட்டரி , எக்கோ சிலிண்டர், வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் என ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், நாகை வேதாரண்யத்தைச் சேர்ந்த மேலும் 8 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருபுறம் இலங்கை கடற்படை மறுபுறம் கடற்கொள்ளையர்கள் என இலங்கையின் தொடர் அத்துமீறல்கள் தமிழக மீனவர்களிடையே அச்சத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது.