ஆடியோ சர்ச்சை : முதலமைச்சருடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு..
ஆடியோ விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசியுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் திமுக முக்கிய புள்ளிகளின் சொத்து பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அதனைத்தொடர்ந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 2 ஆடியோக்களை வெளியிட்டார். அதில் முதல் ஆடியோவில் தி.மு.க.வை சேர்ந்த சிலர் 2 ஆண்டுகளில் ரூ.30 ஆயிரம் கோடி சொத்து சேர்த்துள்ளதாக பிடிஆர் பேசியது போல் இடம்பெற்றிருந்தது. அதனைத்தொடர்ந்து வெளியிடப்பட்ட 2-வது ஆடியோ அதை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது. இந்த விவகாரத்தில் திமுக தரப்பில் பெரிதாக எந்த எதிர்வினையும் இல்லை.
அத்துடன் இந்த ஆடியோ தொடர்பாக பேசிய அண்ணாமலை, “ஒரிஜினல் ஆடியோவும் என்னிடம் உள்ளது. கோர்ட்டுக்கு சென்றால் அந்த ஒரிஜினல் ஆடியோவையும், எங்கே, எப்போது யாரிடம் பேசப்பட்டது என்பதையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்தார். ஆடியோ விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று சந்தித்து பேசியிருக்கிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் இன்று காலையில் நடந்த இந்த சந்திப்பின் போது, ஆடியோ விவகாரம் தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.
இதேபோல் இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் 25-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை (2-ந் தேதி) நடைபெற இருக்கிறது. இதில் விவாதிக்கப்பட உள்ள விவகாரங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.