வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பாஜக பிரமுகருக்கு ஜாமின்
வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி வீடியோ பரப்பிய பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்களுக்கு கடும் நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது போல் வீடியோ வெளியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் பிரசாந்த் குமார் உம்ராவ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகராக உள்ளேன். மேலும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த மூன்றாம் தேதி பீகார் மாநில தொழிலாளர்கள் இங்கு கொடூரமாக தாக்கி கொலை செய்வது போன்ற வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபார்வேர்ட் மேலும் பிஹார் மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகம் பாதுகாப்பு இல்லை என பதிவேற்றம் செய்திருந்தேன். இந்த வீடியோ தான் தயாரித்தது இல்லை. வந்த தகவலை மீண்டும் ஃபார்வேர்டு செய்துள்ளேன். இதில் எந்த உட்கருத்தும் இல்லை. அரசியல் கட்சியில் உள்ளதால் பழிவாங்கும் நோக்கோடு என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த மனு என்று நீதிபதி இளந்திரையன் முன்பாக உத்தரவுக்காக வந்தது. இதனை விசாரித்தபின், மனுதாரருக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மனுதாரர் இனி இதுபோன்று அவதூறான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்ப மாட்டேன் என உத்தரவாத பத்திரத்தை உயர்நீதிமன்றத்தில் மதுரை கிளையில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் தூத்துக்குடி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் மேலும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை மீறினால் முன்ஜாமின் தானாக ரத்தாகிவிடும் என்ற நிபந்தனைகளுடன் முன்ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.