கட்டிடம் இடிந்து பெண் பலியான சம்பவம்- ஒப்பந்ததாரரின் ஜாமின் மனு தள்ளுபடி

 
Highcourt

சென்னை அண்ணாசாலையில் பழைய கட்டிடம் இடிபாடுகள் விழுந்து இளம் பெண் பலியான வழக்கில் கைது செய்யப்பட்ட ஒப்பந்ததாரரை ஜாமீன் விடுவிக்க  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அண்ணாசாலையில் இடிந்துவிழுந்த கட்டிடம்: சாலையில் நடந்துச்சென்ற வங்கி பெண்  ஊழியர் பலி

சென்னை அண்ணாசாலையில்   கிரீம்ஸ் ரோடு அருகே பழைய கட்டிடத்தை ஜேசிபி எந்திரம் மூலம்  இடிக்கும் போது அந்த பகுதியில் நடந்து சென்ற 2 பெண்கள் மீது சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் மதுரையை சேர்ந்த பத்ம பிரியா என்ற 22 வயது தனியார் நிறுவன ஊழியர் உயிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆயிரம் விளக்கு போலீசார், ஒப்பந்ததாரர் அப்துல்ரஹ்மான் உள்ளிட்டோரை கைது செய்தனர். கட்டிட உரிமையாளர் தலைமறைவாக உள்ளார்.

ஜனவரி 29ம் தேதி கைது செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் அப்துல் ரஹ்மான், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்த போது, கட்டிடத்தை இடிக்கும் முன் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும், சம்பவம் நடந்த போது அவர் அங்கு இல்லை என்றும் அப்துல் ரஹ்மான் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யாமல் கட்டிடம் இடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், வழக்கு தொடர்பாக புலன் விசாரணை நடந்து வருவதால் ஜாமீன் வழங்கக் கூடாது என காவல் துறை தரப்பில் ஆஜரான சிட்டி பப்ளிக் ப்ராசிகியூட்டர் தேவராஜ் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இளம் பெண் பலியாகியுள்ளதை கருத்தில் கொண்டும், விசாரணை இன்னும் நிலுவையில் இருப்பதாலும், கைது செய்யப்பட்டு குறுகிய காலமே ஆகியுள்ளதாலும் ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி, அப்துல் ரஹ்மானின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.