"விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை இன்று மாலைக்குள் அகற்ற வேண்டும்" - சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு!!
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை இன்று மாலைக்குள் அகற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பேனர் கலாச்சாரத்தால் பல விபத்துக்கள் அரங்கேறியது. இதனால் பல உயிர்கள் பறிபோனது . இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தில் பேனர்கள் வைப்பது முழுமையாக தடை செய்யும் வகையில், அதற்கான உரிய வழிமுறைகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது. அத்துடன் அனுமதி இன்றி வாழ வைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை இன்று மாலைக்குள் அகற்ற வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது அபராதம் அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, விவர அறிக்கையை இன்று மாலைக்குள் அனுப்ப வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதன்மை செயலாளர்/ஆணையர் அறிவுறுத்தலுக்கு இணங்கவே மண்டலம் 1 முதல் 15 வரை மண்டல அலுவலர்கள் மண்டல செயற்பொறியாளர்கள் மற்றும் மண்டல உதவி வருவாய் அலுவலர்கள் அந்தந்த மண்டல எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் ,விளம்பர பதாகைகள், விளம்பர தட்டிகள் மற்றும் சுவரொட்டிகளை முற்றிலும் கவனத்துடன் உடனடியாக அகற்றி, சம்பந்தப்பட்டவர்கள் இருந்து விதிகளின்படி தண்ட தொகையோ அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, நடவடிக்கை மேற்கொண்டு அந்த விபரத்தினை அறிக்கையாக , மாநகராட்சி வருவாய் அலுவலர்களுக்கு தனி நபர் மூலம் இன்று மாலை 5 மணிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.