"இனி உங்களுடன் பயணிப்பது தமிழின துரோகம்"- நா.த.க.வில் இருந்து விலகிய நிர்வாகி பரபரப்பு அறிக்கை

நாம் தமிழர் கட்சி நாமக்கல் மாவட்ட செயலாளர் பாஸ்கர் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியுள்ளார். மேலும், அவர் தனது விலகல் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு விஷயங்களிலும் சீமான் மீதான தனது விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண் விடுதலை இல்லையேல், மண் விடுதலை இல்லை என்று உணர்த்தி, பெண்களை நாட்டின் கண்களாக மதித்து, ஈழப் போராட்டத்தில் பெண்களின் படை அணியை உருவாக்கி பெரும் சமர் செய்த பிரபாகரனை நீங்கள் தலைவராக ஏற்று கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து நான் உங்களுடன் பயணித்து வருகிறேன். பயணப்பட்டது மட்டும் அல்லாமல் நீங்கள் இனமானம் காக்க பெரும்பணி செய்து வருகிறீர்கள் என்ற நம்பிக்கையில், நான் நாம் தமிழர் கட்சிக்காகவும், உங்கள் சொந்த செலவிற்காகவும் பல லட்சங்களை இது நாள் வரை செலவு செய்துள்ளேன். ஆனால் நீங்களோ தமிழின்/தமிழனின் முதன்மைப் பகையான வலது சாரிகளிடம், நேரடி கூட்டணி வைக்காத குறை ஒன்றே என்ற அளவிற்கு உறவு கொண்டு, உங்களது சுயநலனுக்காக தமிழ் தேசியத்தை அடமானம் வைத்து விட்டீர்கள் என்பதை படிப்படியாக அறிய அறிய மிகுந்த மன வேதனைக்கு உட்பட்டேன். பிச்சை எடுத்து தான் வாழ்கிறேன் என்ற போது, அது தமிழுக்கானது, பிச்சை அல்ல என்று பெருமிதம் அடைந்தோம்.
உங்களது ஈழக் கட்டு கதைகள் மற்றும் பெரியார் அம்பேத்கர் நேர்கோட்டில் வைத்தல் பற்றிய விமர்சனங்களுக்கு யாருடன் வேண்டும் என்றாலும் நேரடி விவாதத்திற்கு நான் தயார் என்று சவால் விட்ட நீங்கள், இன்று வரை சவாலை ஏற்று முன் வந்தவர்களிடம் நேரடி விவாதம் செய்ய மறுப்பது ஏன்? விஜயலட்சுமி அவர்கள் தொடர்ந்த வழக்கின் தொடர்ச்சியாக தான் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றீர்களா? அப்படி இல்லையெனில் கடந்த 10 ஆண்டு ADMK ஆட்சி காலத்தில் நீங்கள் ஈழத்திற்காக செய்த நகர்வுகள் என்ன? இது தனிப்பட்ட பிரச்சனை என்றாலும் நீங்கள் பொது வெளியில் சொன்னதால் தான் இந்தக் கேள்வி... விஜயலட்சுமி முதலில் யார் என்று தெரியாது, பின்னர் மன்றாடிக் கேட்டதால் மனிதாபிமான அடிப்படையில் மாதம் 50,000 கொடுத்தேன். பின்னர் Maintain செய்ய 30,000 என்னிடம் கேட்டார், பின்னர் விருப்ப உறவு, உச்சமாக அவர் பாலியல் தொழிலாளி! இதற்கு strong ஆக fight செய்ய வேண்டி தான் சக தோழர் ஆனீர்களோ?
இனி உங்களுடன் பயணிப்பது - என் தாய்த்தமிழையும், தமிழர் நல் திருநாட்டையும் இடுகாட்டில் புதைக்கும் தமிழின துரோகமே. இத்தனை வருடங்களாக என்னுடன் பயணித்து சுக துக்கங்களில் பங்கெடுத்த எனது அன்பு நாம் தமிழர் உறவுகள் அனைவர்க்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பலப்பல. இனியும்,. என்றும்,. எனது தமிழ் தேசியப் பயணம் உண்மையான உறவுகளுடன் தொடரும்" எனத் தெரிவித்துள்ளார்.