‘கவனமாக, பாசிடிவ்வாக இருங்கள்..’ - குஷ்புவின் முடிவால் ரசிகர்கள் சோகம்..
சமூக வலைதளத்தில் இருந்து விலகுவதாக நடிகை குஷ்பு அறிவித்திருக்கிறார்.
தமிழ் திரையுலகில் 80 களில் கனவுக்கண்ணியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு.. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த குஷ்பு, பல ஆண்டுகளாக அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஆரம்பத்தில் திமுகவில் இருந்த குஷ்பு, பின்னர் காங்கிரஸில் இணைந்து செயலாற்றி வந்தார். அண்மையில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்ட அவர், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமானராகவும் இருந்து வருகிறார்.
சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு, சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் இருந்து சிறிது காலம் விலகுவதாக குஷ்பு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “நண்பர்களுக்கு வணக்கம், எனக்கு கொஞ்சம் டீடாக்சிஃபிகேஷன்(நச்சுத்தன்மையை அகற்றுதல்) தேவை என்பதால், ரேடாரில் இருந்து வெளியேறுகிறேன். விரைவில் இணைகிறேன். அதுவரை கவனமாக இருங்கள், நன்றாக இருங்கள், பாசிடிவ்வாக இருங்கள். அனைவரையும் நேசிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Hi friends.. I need some detoxification. Going off the radar. Will connect soon. Till then, take care, be good, stay positive. Love you all. ❤️
— KhushbuSundar (@khushsundar) July 30, 2023
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருந்துகொண்டு தற்போது வரை மணிப்பூர் கொடூரம் குறித்து வாய் திறக்காமல் இருப்பதாக குஷ்பு மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அவர் சமூக வலைதளங்களில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.