அழகான புரொபைல் போட்டோ- சினுங்கல் பேச்சு : அண்ணன் -தம்பியிடம் 34 லட்சம் ஆட்டைய போட்ட பெண்
திருமணமான பெண் தான் டாக்டருக்கு படித்து வருவதாக சொல்லி முகநூலில் அழகான புரொபைல் போட்டோவை வைத்து அதன்மூலம் போலீஸ்காரர் இளைஞரையும் அவரது தம்பியையும் மடக்கி 34 லட்சம் ஆட்டைய போட்டு இருக்கிறார். அக்கா- தங்கைகள் பேசுவதாக நினைத்து ஒரே பெண்ணிடம் அண்ணன் தம்பிகள் 34 லட்சத்து இழந்து நிற்கிறார்கள்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா மூலக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதிராஜா. 25 வயது இளைஞரான இவர் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 மாதமாக இவர் சென்னை திருவொற்றியூரில் உள்ள கடற்படையில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த மாதம் முகநூலில் ஐஸ்வர்யா என்ற இளம்பெண் அறிமுகமாகியிருக்கிறார். ஆவடியை சேர்ந்த தனக்கு 26 வயது ஆகிறது என்றும் டாக்டருக்கு படித்து வருவதாகவும் சொல்லி இருக்கிறார். டாக்டருக்கு படித்து வரும் பெண் என்பதால் அவருடன் அடிக்கடி பேசி வந்திருக்கிறார் பாரதிராஜா. ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று கேட்டிருக்கிறார்.
டாக்டருக்கு படிக்கும் பெண் திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று கேட்கிறார் என்று பாரதிராஜா உடனே சம்மதம் சொல்ல, அடுத்து தன் ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் ஐஸ்வர்யா. கல்யாணத்திற்கு பூஜை செய்ய வேண்டும், நகைகள் வாங்க வேண்டும், இது வேண்டும் என்று பணம் கேட்க, பல தவணையாக 14 லட்சம் வரைக்கும் ஐஸ்வர்யாவின் தந்தை பழனியின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
இதற்கிடையில் ஐஸ்வர்யா தங்கை என்று பாரதிராஜாவிடம் பேஸ்புக்கில் அறிமுகமாகியிருக்கிறார். தனக்கு ஒரு தங்கை இருப்பதாக அவரின் ஒரு போலியான புரொபைல் பிக்சரை வைத்து பாரதிராஜாவிடம் பேசியிருக்கிறார். அவர் உடனே ஐஸ்வர்யாவின் தங்கை என்றே நம்பி தனது பெரியப்பா மகன் மகேந்திரனுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். பாரதிராஜாவிடம் கேட்டது போலவே மகேந்திரனிடமும் திருமணத்திற்கு அது வாங்க வேண்டும் இது வாங்க வேண்டுமென்று கேட்க, அவரும் 20 லட்சம் வரைக்கும் கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக போன் கால் வரவில்லை. இவர்கள் போன் செய்தாலும் ஐஸ்வர்யாவும் அவரது தங்கையும் எடுக்கவில்லை. நேரில் கூட பார்க்காமல் எதற்கு இத்தனை இலட்சத்தை அனுப்பி வைத்தீர்கள் என்று மகேந்திரன்- பாரதிராஜா இருவரையும் திட்டி தீர்த்திருக்கிறார்கள்.
இதையடுத்து மகேந்திரன்- பாரதிராஜா இருவரும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்க, புகாரின்பேரில் சங்கர் ஜிவால் ஆவடி போலீஸ் ஸ்டேஷனில் விசாரிக்க சொல்ல, குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட ஐஸ்வர்யா அவரது பெற்றோர்களிடம் வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போதுதான் ஐஸ்வர்யாவும் அவரது தங்கையும் வேறு வேறல்ல இரண்டும் ஒரே பெண் என்பது தெரியவந்திருக்கிறது. மேலும் முகநூலில் அழகான புகைப்படத்தை வைத்து விட்டு ஏமாற்றியது தெரிய வந்திருக்கிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டதாம். கணவர் ஆந்திராவில் வேலைபார்த்து வருகிறார். ஐஸ்வர்யா தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
முகநூலில் உள்ள அழகான ஃபோட்டோவை பார்த்துவிட்டு பேச்சில் மயங்கி 34 லட்சத்து பணத்தை இழந்துவிட்டு நிற்கும் அண்ணன் - தம்பிகளின் நிலை பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.