பறவைக்காய்ச்சல் எதிரொலி- நாமக்கல் கோழிப்பண்ணைகளில் தீவிர பாதுகாப்பு

 
அட் அட்

சென்னையில் நூற்றுக்கணக்கான காகங்கள் இறந்துள்ள சம்பவத்தில், பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பறவை காய்ச்சல் எதிரொலி- நாமக்கல் பண்ணைகளில் உள்ள கோழிகளுக்கு தடுப்பூசி  போடும் பணி தீவிரம்

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான காகங்கள் நோய் தாக்கி திடீரென இறந்திருப்பது தெரியவந்துள்ளது. அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை போன்ற சுற்றுப்புறங்களில் 1,000 முதல்1,500 காகங்கள் இறந்துள்ளதாக தெரிகிறது. உள்ளூர் அதிகாரிகள், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் ஆதரவுடன், காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் இறந்த காகங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் போபாலில் உள்ள, ஐசிஏஆர்-தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவன (நிஹ்ஷாத்) ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டதில், இறந்த காகங்களை பறவைக்காய்ச்சல் (எச்5என்1) தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பறவைகளிடையே விரைவாகப் பரவக்கூடியது.

பறவைக் காய்ச்சலை உருவாக்கும் எச்5என்1 வைரஸ் கிருமிகள் குறிப்பாக இடம் விட்டு இடம் பறக்கும் புறா, காகம், கொக்கு, நாரை போன்ற பறவைகளால் அதிக பரப்பப்படுகிறது. மேலும் அவை வீடுகள் மற்றும் பண்ணைகளில் வளர்க்கப்படும் வாத்துகள் மற்றும் கோழிகளுக்கும் பரவுகிறது. சில நேரங்களில் மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டிகளிலும் பரவக்கூடும். தமிழ்நாட்டில் இதுவரை மனிதர்கள் யாரையும் இந்நோய் தாக்கியதாக கண்டறியப்படவில்லை. தொற்றுநோய் பரவலைத் தடுக்க, தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை, சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்கள் உட்பட மாநிலம் முழுவதும் கண்காணிப்பை மேம்படுத்தவும், உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. பறவை இறப்பு மண்டலங்களில் முழுமையான கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கை, வீட்டு கோழிகள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய பறவை இனங்களைக் கண்காணித்தல் மற்றும் அசாதாரண பறவை இறப்புகளை அதிகாரிகளுக்கு விரைவாகத் தெரிவித்தல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல், சேலம், ஈரோடு உள்ள நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1,000 கோழிப்பண்ணைகளில் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. 2 கோடிக்கும் அதிகமான பிராய்லர் கோழிகள் வளர்க்ப்படுகின்றன.

கோழிப்பண்ணைகளில் பாதுகாப்பு நடவடிக்கை - நாமக்கல் ஆட்சியர் ஆய்வு

இந்த நிலையில் ஏற்கனவே அண்டை மாநிலங்களில் பரவி வந்த பறவைக்காய்ச்சல் தமிழக தலைநகர் சென்னையில் உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழக கோழிப்பண்ணையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழிப் பண்ணைகளில் வெளியாட்கள் மற்றும் வாகனங்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டு, உயிரி பாதுகாப்பு (பயோ செக்யூரிட்டி) நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பண்ணை வளாகங்களில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில் சுகாதாரமான முறையில் கோழிப்பண்ணைகளை அமைத்து நடத்தி வருவதாலும், சென்னையில் இருந்து நாமக்கல்லுக்கோ, நாமக்கல்லில் இருந்து சென்னைக்கோ கோழிப்பண்ணை சம்மந்தமான முட்டை, தீவனம் போன்ற பொருட்கள் போக்குவரத்து நடைபெறுவதில்லை. இதனால், நாமக்கல் மண்டலத்தில் பறவைக்காய்ச்சல் தொற்று நோய் பரவ வாய்ப்பில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.