பாஜக எதிர்க்கட்சியாக தனது கடமையை சரியாக செய்கிறது- அண்ணாமலை
பாஜக கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுவதெல்லாம் அவரது சொந்த கருத்து. இன்னொரு கட்சியின் கருத்துக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “பத்திரிகையாளர்கள் யாரையும் தான் புண்படுத்தவில்லை போலி பத்திரிகையாளர் சங்கங்கள் பல முறை என்னை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள், கடுமையாக கேள்வி கேட்கிறார்கள் எனவே அதற்கு கடுமையாக பதில் சொல்கிறேன். நேர்மையான பத்திரிகையாளர்களுக்கு நான் என்றும் ஆதரவாக இருப்பேன். போலி பத்திரிக்கையாளர்கள் என்னை விமர்சனம் செய்வதை நான் என்றும் கண்டுகொள்ளமாட்டேன்
பாஜகவை பொருத்தவரை தமிழகத்தில் கட்சியை வலிமைப்படுத்தவே மாநிலம் முழுவதும் சட்டமன்ற தொகுதிகள் மற்றும் பாராளுமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம். மக்கள் வரிப்பணத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் திமுகவினர். அவர்களை எதிர்த்து ஆக்கப்பூர்வமாக தவறுகளை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டியது ஒரு எதிர்க்கட்சியின் கடமை என்பதால் அதைத்தான் பாஜக செய்கிறது. பாஜக கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுவதெல்லாம் அவரது சொந்த கருத்து. இன்னொரு கட்சியின் கருத்துக்கு நான் பதில் சொல்லவிரும்பவில்லை. கூட்டணி குறித்த கேள்விகளுக்கும் அவர்கள் பேசுகின்ற கருத்துகளுக்கும் தேசிய தலைமையே கருத்து சொல்லும்.
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் கண்ணியமான இருக்கையில் இருக்கிறார். இரண்டு முறை சட்டசபையில் பேச வானதி சீனிவாசன் முயன்றும் பேச அனுமதிப்பதில்லை. முதலில் சபாநாயகர் தன்னை சுயபரிசோதனை செய்து கொண்டு அனைவருக்கும் கட்சி பாகுபாடின்றி சட்டபேரவையில் பேச வாய்ப்பளிக்க வேண்டும். சட்டப்பேரவையில் டிவி நிகழ்ச்சியின் விவாதத்தில் பேசுவது போல சபாநயகர் தனது சொந்த கருத்தையெல்லாம் பேசுகிறார்.
தீவிரவாதிகளுக்கு மதசாயம் பூச பாஜக விரும்பவில்லை, தீவிரவாதம் செய்ய நினைத்தவர்கள் சிறையில் தான் இருக்க வேண்டும். ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளிக்க மாட்டார். தீவிரவாதத்திற்கு அவர் என்றும் துணை நிற்க மாட்டார் என நம்புகிறேன்” என்றார்.