“இந்த மாநாடு ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணி.. எங்களை சீண்டினால் சூரசம்ஹாரம் தான்”- அண்ணாமலை

 
அ அ

முருகனை வட இந்தியாவில் யாருக்கும் தெரியாது என்று தமிழக அரசியல்வாதிகள் கூறுகிறார்கள் என  பாஜக மாநில முன்னாள்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் உரையாற்றிய பாஜக மாநில முன்னாள்தலைவர் அண்ணாமலை, “பள்ளிகளுக்கு செல்லக்கூடிய குழந்தைகள் நெற்றியில் திருநீறும், கழுத்தில் ருத்ராட்ச கொட்டையும் அணிந்து செல்ல வேண்டும். செல்ஃபி கேட்டால் திருநீறை அழிக்கிறார் ஒரு அரசியல் தலைவர். மதம் மாறாதீர்கள், பெருமையுடன் நெற்றியில் விபதீ அணிந்து செல்லுங்கள். தமிழக அரசியல் இனி மாறப்போகிறது. ஒருவர் கூட மதம் மாற கூடாது.. மதம் மாறியவர்களை திருப்பி கொண்டு வர வேண்டும்.  மதுரையில் 5 லட்சம் பேர் திரண்டிருக்கும் இந்த மாநாடு, ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணி.. எங்களை சீண்டினால் சூரசம்ஹாரம் தான்.

இந்து மக்களிடம் ஒற்றுமை வராது என்ற தைரியம் அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது. அதை நாம் உடைக்க வேண்டும். ஒரு இடத்திலாவது அறநிலையத்துறையின் செயல்பாடுகள் ஒழுக்கமாக இருக்கிறதா? பணம் இருப்பவர்களிடம் ஒருமாதிரியும் பணம் இல்லாதவர்கள் கிட்ட ஒருமாதிரியும் இந்து அறநிலையத்துறை நடந்துக்கொள்கிறது. இதை அனைத்தையும் நாம் மாற்ற வேண்டும். மொழியும், ஆன்மீகமும், இலக்கியமும் ஒன்றாக இருக்கும் பெருமை தமிழுக்கு உண்டு. கந்த சஷ்டி கவசத்தில் அறிவியல், விஞ்ஞானம் உள்ளது. 5,400 ஆண்டுகள் பழமையானவன் தமிழன். அந்த பழமையோடு வாழ விடுவார்களா? முருகனை வட இந்தியாவில் யாருக்கும் தெரியாது என்று தமிழக அரசியல்வாதிகள் கூறுகிறார்கள். வட இந்தியாவில் இருக்கும் 18 மஹா புராணங்களில் மொத்தம் 95,000 ஸ்லோகங்கள் உள்ளன. ஆனால் ஒரே ஒரு ஸ்கந்த புராணத்தில் மட்டும் ஒரு லட்சம் ஸ்லோகங்கள் இருக்கின்றன” என்றார்.