முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை

 
annamalai mkstalin

BGR Energy நிறுவனத்துக்கு ஆதரவாக, ₹4,442 கோடி மதிப்பிலான ETPS திட்டத்தை அந்த நிறுவனத்துக்கே மீண்டும் வழங்கியதற்காக, தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் மீதும் தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Annamalai

இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு மின்சார வாரியம், ஒரு துணை மின்நிலையத்தை அமைப்பதற்காக BGR Energy நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட  ஒரு சிறிய ஒப்பந்தத்தை, பணியை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக ரத்து செய்துள்ளது. இதுபோன்ற  ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, அரசுக் கருவூலத்துக்கு இழப்பை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு மின்சார வாரியம்  தயாராகி வருகிறது என்றும் அறிகிறோம்.  அப்படியானால், BGR Energy நிறுவனத்துக்கு ஆதரவாக, ₹4,442 கோடி மதிப்பிலான ETPS திட்டத்தை அந்த நிறுவனத்துக்கே மீண்டும் வழங்கியதற்காக, தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் மீதும் தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கடந்த 2022 ஆம் ஆண்டு BGR Energy நிறுவனத்துக்கு மீண்டும் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை, அந்த நிறுவனம் தொடங்க இயலாமல் காலம் தாழ்த்தியதால், தமிழ்நாடு மின்சார வாரியம், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதனை கண்டித்து கடிதம் எழுதியது. ஒரு சிறிய துணை மின்நிலையத் திட்டத்தை நிதிப் பற்றாக்குறையால் செயல்படுத்த முடியாத நிறுவனம், எப்படி ஒரு மின் உற்பத்தி நிலையத்தை செயல்படுத்துவார்கள் என்ற கேள்வியை முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.