விருதுநகர் மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் இருந்து அகற்றப்பட்ட பாரத மாதா சிலை - பாஜக கண்டனம்

 
BJP

விருதுநகர் மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் இருந்து அகற்றப்பட்ட பாரத மாதாவின் சிலையை உடனடியாக பாஜகவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விருதுநகர் மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தின் உள்ளே நிறுவுவதற்காக அலுவலக சுற்றுச் சுவருக்கு உள்ளே வைத்திருந்த மூடியிருந்த பாரத மாதா சிலையை, பூட்டியிருந்த அலுவலகத்தில் நேற்று இரவோடிரவாக  பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, காவல்துறையினர் தூக்கி சென்றுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 


பா.ஜ.க அலுவலகத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த, அதிலும் மூடப்பட்டிருந்த சிலையை அகற்றும் காவல்துறை, சென்னை பள்ளி கல்வித்துறை வளாகத்தில் நீண்ட காலமாக நிறுவ முடியாமல் இருக்கும்,  நீதிமன்ற உத்தரவுகளை மீறி திறக்கத் துடிக்கும் முன்னாள் கல்வி அமைச்சர் அன்பழகனின் சிலையை பொது வெளியில் வைத்திருப்பது சட்ட விரோதம் இல்லையா? உடனடியாக, பாரத அன்னையின் சிலையை பா.ஜ.க வினர் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். அன்பழகன் அவர்களின் சிலை, பள்ளி கல்வித்துறை வளாகத்திலிருந்து அப்புறப்படுத்தபட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.