"வாக்காளர்களை ஏமாற்றி விடலாம் என்று பாஜக பகல் கனவு காண்கிறது" - கே.எஸ்.அழகிரி

 
Ks Azhagiri

வளர்ச்சியின் கதாநாயகனாக மோடி தன்னை முன்னிலைப்படுத்துவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த வாரம் சத்தீஸ்கரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஏழைகளுக்கு வழங்கப்படும் பிரதமரின் இலவச உணவு தானிய திட்டம் நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.  எந்த குடிமகனும் பட்டினியோடு உறங்கச் செல்லக்கூடாது என்பதற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2028 ஆம் ஆண்டு வரை 80 கோடி இந்தியர்கள் பசியிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள இலவச உணவு தானியங்களைப் பெறுவார்கள் என்று இதற்கு பொருள். 5 டிரில்லியன் டாலர் உள்நாட்டு மொத்த உற்பத்தியுடன் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக அரசு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அதாவது, இந்தியர்களில் பெரும்பாலோர் 5 ட்ரில்லியன் டாலர் உள்நாட்டு மொத்த உற்பத்தி இலக்கை எட்டினாலும் பட்டினி கிடப்பார்கள் என்று அர்த்தம்.  இந்த 5 ஆண்டு இலக்கால் யார் பயனடைவார்கள்?

ks alagiri

இன்றைக்கு தேசம் பொருளாதார சுனாமியின் உச்சத்தில் இருப்பதாக இந்திய அரசு சொல்கிறது. 2028 ஆம் ஆண்டு வரை இலவச ரேஷன் அரிசியை பெறப்போகும் இந்திய குடிமக்கள் குறிப்பாக, 80 கோடி மக்களுக்கு 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை குறுகிய காலத்துக்குள் அடைய எவ்வளவு வேகமாக ஓட வேண்டும்? மூலதனம், உற்பத்தி மற்றும் தொழிலாளர்களை மையமாகக் கொண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி இருக்கிறது. ஆனால் 5 இல் 1 பங்கு இந்தியர்களுக்கு 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது.பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை, 2021 ஆம் ஆண்டில் 41 சதவிகித தேசத்தின் வளம் 1 சதவிகிதத்தினரிடம் குவிந்திருந்தது. அதேசமயம் 50 சதவிகிதத்தினருக்கு 3 சதவிகித வளம் மட்டுமே இருந்தது என ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த சூழலில், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தால் பெறப் போகும் வளங்கள் பணக்கார அதிகார வர்க்கத்துக்கு மட்டுமே பயன் தரும். அதேசமயம், குறைந்த வளம் கொண்ட மக்களுக்கு  5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தால் பயன் ஏதும் இல்லை.   ஆனால், பெரும்பாலான சாதாரண எளிய மக்களிடமிருந்து ஜி.எஸ்.டி. வரியாக வருமானம் அரசுக்கு செலுத்தப்படுகிறது. அதன்படி, 64 சதவிகித சரக்கு மற்றும் சேவை வரியை 50 சதவிகித மக்கள் செலுத்துகிறார்கள். ஆனால் பெரும் பணக்காரர்கள் 3 சதவிகித சரக்கு மற்றும் சேவை வரியை மட்டுமே செலுத்துகிறார்கள். நாட்டின் மற்றொரு வளர்ச்சியாகப் பார்க்கப்படும் தொழிலாளர்களைப் பொறுத்தவரை,  நம்பிக்கையற்ற கல்வி மற்றும் திறன் மற்றும் டிஜிட்டல் கல்விக்கான தடையால் அவர்களது முன்னேற்றம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

KS Azhagiri

அடுத்த 2029 மக்களவை தேர்தலுக்கு முன்பு 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தால் பணக்காரர்கள் வலுவான நிலையை அடைவார்கள் என்பது மோடி அரசுக்கு நன்றாகவே தெரியும். மோடி கொடுத்துள்ள மற்றொரு உத்தரவாதம், அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் 3 வது பெரும் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்பது தான். முதலாவதாக, தனிநபர் வருமானம் ரூ.1,99,200 (2400 டாலர்) என்ற வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் 194 நாடுகளில் இந்தியா 149 வது இடத்தில் தான் உள்ளது. தனிநபர் வருமானம் உயர்ந்தால் தான் மக்களின் வாழ்க்கை நிலை சிறப்பாக இருக்கும். உலக அளவிலான உள்நாட்டு மொத்த உற்பத்தியில் ஜப்பானை விட சீனா அதிகமாக இருந்தபோதும், சீனாவின் தனிநபர் வருமானம் ரூபாய் 10,79,000 (13,000 டாலர்) காட்டிலும் அதிகரித்து ஜப்பானின் தனிநபர் வருமானம் ரூபாய் 28,22,000 (34,000 டாலர்) என்கிற அளவில் சிறப்பிடத்தில்  இருப்பது கவனிக்கத்தக்கது. இந்தியாவின் தனிநபர் வருமான வளர்ச்சி 5 டிரில்லியன் டாலரை நோக்கியதாக இருக்கிறதா? இதுவரை இது குறித்த அரசின் அதிகாரப்பூர்வ மதிப்பீடு ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில், மோடியின் கனவு கேள்விக்குறியாகவே இருக்க முடியும். ஆனால்,  அதற்குள்ளாக சமூக ஊடகத்தில் தவறான புள்ளி விவரத்தின் அடிப்படையில் 4 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி அடைந்து விட்டதாக செய்திகள் பரப்பப்பட்டது. இதன்மூலம் ஐந்து மாநில தேர்தல்களில் வாக்காளர்களை ஏமாற்றி விடலாம் என்று பா.ஜ.க. பகல் கனவு காண்கிறது.

ks alagiri

விநியோகம் அல்லது சமத்துவமற்ற குறியீட்டின் அடிப்படையில் மட்டுமே 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய முடியும். இந்த குறியீடு 0-100 என உலகப் பொருளாதாரத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி சீனா மற்றும் ஜப்பானின் மதிப்பு 50 க்கும் மேல் உள்ளது. ஆனால், 21.9 மதிப்பு உள்ள இந்தியாவை விடப் பல மடங்கு அதிகமாக இந்த நாடுகளின் பொருளாதார பங்களிப்பு உள்ளது. 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தால் ஏழைகள், பணக்காரர்கள் என்று இந்தியா இரண்டாகப் பிளவுபடுமா? பெரும்பாலான மக்கள் இன்னும் வளர்ச்சிப் பாதையில் இணைக்கப்படாமலேயே மோடி ஆட்சி நடைபெற்று வருகிறது. வளர்ச்சியில் சமநிலைத்தன்மை இல்லை. மோடி ஆட்சி என்பது யாருக்காக நடைபெறுகிறது என்பதை மேற்கண்ட புள்ளி விவரங்கள் தெளிவுபடுத்துகின்றன. அதேநேரத்தில், வளர்ச்சியின் கதாநாயகனாக மோடி தன்னை முன்னிலைப்படுத்துவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். " என்று குறிப்பிட்டுள்ளார்.