அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு : அண்ணாமலையின் ஆலோசகர் கைது..
அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பிய பாஜக நிர்வாகி செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட செல்வகுமார் பாஜக மாநில தொழில் பிரிவு துணைத்தலைவராகவும், அண்ணாமலையின் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.
தமிழக பாஜக ஐடி விங் மாநில துணைத் தலைவராக இருந்து வருபவர் செல்வகுமார். இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, செந்தில் பாலாஜி உள்பட பலரை கடுமையாக விமர்சித்து வந்தார். குறிப்பாக அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த , செல்வகுமாரின் ட்விட்டர் பதிவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. செல்வகுமார் நேற்று வெளியிட்ட பதிவில், “செந்தில் பாலாஜியிடம் மட்டுமே 1.0 லட்சம் கோடிக்கு மேல் சொத்து இருக்கும். அவர் கமிஷன் கறப்பதில், திருடுவதில் வல்லவர். நீயும் திருடு எனக்கும் பங்கு கொடு என்ற டீலிங் அடிப்படையில்தான் அவர் அமைச்சராக்கபட்டுள்ளார்”என்றும்,
“கோவைக்கு பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி வந்த பிறகு அனைத்து விதமான போதை பொருட்கள் விற்பனையும் பல மடங்கு அதிகரிக்கபட்டு இளைஞர்களின் வாழ்வு சீரழிக்கபடுகிறது. போதைபொருட்கள் விற்பனையை தடை செய்து மக்களை போதை பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டிய கடமை கஞ்சாபாலாஜியின் துறைக்கே. ஆனால், அமைச்சரோ தன்னுடைய கரூர் கம்பெனி கூடுதலாக சம்பாதிக்க போதை பொருட்கள் விற்பனையை ஊக்குவித்து வருகிறார்” என்றும் விமர்சித்தித்திருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக பாஜகவின் தொழில் பிரிவு துணைத் தலைவர் செந்தில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை 8.15 மணி அளவில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை பாஜக நிர்வாகி அமர்பிரசாரத் ரெட்டி டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.