ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் ஒன்று சேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்

 
nainar nagendran

ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகிய அனைவரும் தனித்தனி அணியாக பிரிந்து நிற்காமல் ஒன்று சேர்ந்து தி.மு.க.வை எதிர்க்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். 

திருநெல்வேலி பாஜக சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற பாஜக தலைவருமான நயினார் நாகேந்திரன் கன்னியாகுமரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கூறியதாவது: வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று மத்திய உளதுறை அமைச்சர் அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் ஏற்கனவே அறிவித்துவிட்டனர். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட அனைவரும் சேர்ந்து அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெறுவதற்காக தேர்தல் பணியாற்றுவோம். கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவினால் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. நாடாளுமன்ற தேர்தல் வேறு. சட்டமன்ற தேர்தல் வேறு. சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு முறையான வாக்குப்பதிவு நடைபெறும். நாடாளுமன்றத்தை பொறுத்தமட்டில் யார் இந்த நாட்டினுடைய பிரதமராக வரவேண்டும் என்பதை பொறுத்து தான் வாக்கு வங்கி அமையும்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தமட்டில் தி.மு.க.வை எதிர்க்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் சேர வேண்டும். அப்படி ஒன்றுபட்டு தேர்தல் களத்தை சந்தித்தால் தான் தி.மு.க.வை தோற்கடிக்க முடியும். ஆகையால் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகிய அனைவரும் தனித்தனி அணியாக பிரிந்து நிற்காமல் ஒன்று சேர்ந்து தி.மு.க.வை எதிர்க்க வேண்டும். தி.மு.க.வை எதிர்க்கக் கூடிய அனைத்து கட்சிகளும் ஒரேஅணியில் இணைய வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். திருமாவளவன் அ.தி.மு.க. கூட்டணியில் சேருவாரா? என்பது பற்றி அவர்தான் கருத்து சொல்ல வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடி தான் மீண்டும் பிரதமர் ஆவார். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இவ்வாறு கூறினார்.