“கோவை, மதுரைக்கு மெட்ரோ வரக்கூடாது என்றே திமுக திட்ட அறிக்கை கொடுத்துருக்காங்க”- நயினார் நாகேந்திரன்

 
நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன்

கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு நிராகரிக்கவில்லை, கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை வரக்கூடாது என தமிழக அரசு நினைக்கிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “தமிழ்நாட்டில் தினமும் கொலையும்ம் கொள்ளையும், போதை பொருட்கள் கலாச்சாரமும் எல்லா இடங்களிலும் போய்விட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு 4 கொலைகள் நடந்திருக்கிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 15 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. பாலியல் குற்றங்கள் 18 ஆயிரத்திற்கும் மேல் நடந்திருக்கிறது. கடந்த ஆட்சியை விட கற்பழிப்பு சம்பவம் இந்த ஆட்சியில் 15 சதவீதம் அதிகரித்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்திருக்கிறது. தற்கொலைகளின் தலைநகரமாக தமிழ்நாடு விளங்கி கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் சமூக நீதியை குறித்து அழகாக பேசுவார்கள். திருமாவளவன் வேங்கை வயல் சம்பவம் குறித்து ஒரு விஷயம் கூட வெளியில் பேசவில்லை.


சொத்துவரி உயர்வு 300 மடங்கு அதிகம். இந்த ஆட்சியில் பஸ் மட்டும் இலவசமாக கொடுத்திருக்கிறார்கள். நெல்லைப் பகுதியில் எந்த சாலைகளும் சரியான முறையில் இல்லை.கரூரில் 41 பேர் தமிழக வெற்றி கழக கூட்டத்தில் பங்கேற்று இறந்து போனார்கள். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மக்கள் இறந்து போனார்கள். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை. நேற்று ராமநாதபுரத்தில் ஒரு பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு இருக்கிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக ஆக்குவதற்கு பயபக்தியோடு கூட்டணியை நடத்தி வருகிறார்கள். ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்வதாக கூறினார்கள். செய்ய முடியாது என்று தெரிந்தும். பிரதமரை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக கோவையில் மடை மாற்றுவதற்காக தற்போது ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். கோயமுத்தூரில் மெட்ரோ ரயில் கொண்டு வரவில்லை ஒன்றிய அரசு நிராகரித்துவிட்டது என்று கூறுகிறார்கள். பொதுவாக திட்டம் வர வேண்டுமென்றால் மெட்ரோவிற்கு ஒரு பாலிசி இருக்கிறது. 20 லட்சம் மக்கள் தொகை வேண்டும். வேண்டுமென்றே அவர்கள் ஒன்றிய அரசிற்கு டிபிஆர் அறிக்கையில் அனுப்பும்போது அதை அனுப்பவில்லை.முதலமைச்சர் அதை மீண்டும் வலியுறுத்த வேண்டும். திமுகவினர் மதுரையில் பஸ் போக்குவரத்திற்கும் ரயில் போக்குவரத்திற்கும் 3 மினிட்ஸ் தான் கேப் இருக்கிறது என்று எழுதி இருக்கிறார்கள். ஏன் அப்படி எழுதினார்கள்? தேவை என்று தானே எழுத வேண்டும்.வேண்டுமென்றே கொங்கு மண்டலத்திற்கு மெட்ரோ ரயில்  திட்டத்தை கொடுக்கக் கூடாது என்பதற்காகவே திட்ட அறிக்கை தயார் செய்திருக்கிறார்கள். மீண்டும் அந்த அறிக்கையில் அதிக இடங்களை இடிக்க வேண்டி இருக்கும், அதற்கு அதிக செலவு ஆகும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.தமிழக முதலமைச்சர் அரசியல் செய்வதற்காகவே மெட்ரோ ரயில் அறிக்கையை ஒன்றிய அரசிற்கு அனுப்பி இருக்கிறார்.


ஆர்ப்பாட்டத்தை அறிக்கை திருப்பி வந்தவுடன் வைத்திருக்க வேண்டியதுதானே ஏன் பிரதமர் வந்த தினத்தில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.ஏன் முதல்வர் 15ம் தேதி இந்த அறிக்கைக்கு பதில் எழுதவில்லை. ஏன் மக்களை ஏமாற்றுகிறீர்கள்.மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்படவில்லை. அந்த அறிக்கையை dpr ஒன்றிய அரசு திருப்பி அனுப்பி இருக்கிறது. கோயம்புத்தூருக்கு மெட்ரோ ரயில் வரக்கூடாது என்பதற்காகத்தான் தமிழக அரசு இதுபோன்ற ஒரு திட்ட அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார்கள் என்று நான் பகிரங்கமாக சொல்வேன். எந்த திட்டமாக இருந்தாலும் மாநில அரசின் மூலமாகத்தான் செய்ய முடியும்.நேற்று எனக்கு தெரிந்திருந்தால் இது குறித்து பிரதமரிடம் நானே எடுத்து கூறி இருப்பேன் அது ஒரு பெரிய விஷயமே இல்லை. 2026 ஜூன் மாதம் கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை நாங்கள் கொண்டுவந்து காண்பிக்கிறோம்” என்று கூறினார்.