ரூ.5,000 அறிவிப்பை கேட்டு எனக்கு தூக்கி வாரிப்போட்டது - நயினார் நாகேந்திரன்
பெண்களுக்கான 5000 ரூபாய் அறிவிப்பை கேட்டு எனக்கு தூக்கி வாரிப்போட்டது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “மோடி மஸ்தான் வேலை செய்து மக்களை ஏமாற்ற கூடியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று காலை பெண்களுக்கு 5000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்ததை கேட்டு எனக்கு தூக்கி வாரி போட்டது. அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்கள். ஆனால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தான் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. அதுவும் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தான் வழங்கினார்கள். தற்போது பாஜகவினர் அந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார்கள் எனக் கூறி 5000 ரூபாய் பணத்தை வழங்கியுள்ளார்கள்.5,000 ரூபாய் பணம் தேர்தலுக்கான அச்சாரம் தான்.
தமிழ்நாட்டில் நிலவும் கஞ்சா விற்பனை, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது உள்ளிட்டவற்றை மறைக்க தான் 5000 ரூபாய் பணத்தை வழங்குகிறார்கள். இதைப் பார்த்து மக்கள் ஏமாற தயாராக இல்லை. 2026 தேர்தலில் திமுகவிற்கு ஒட்டுமொத்தமாக தமிழக மக்கள் விடுமுறை கொடுப்பார்கள். அமித்ஷா ஒவ்வொரு முறையும் வருவார் போவார் அப்பொழுதெல்லாம் ஒரு மாற்றம் நடக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாங்கள் கொடுக்கும் உறுதிமொழிகளை நிச்சயமாக நிறைவேற்றுவோம். முன்னாள் அமைச்சரும் த.வெ.க நிர்வாகியுமான செங்கோட்டையன் விஜய்யை தேடிக் கொண்டிருக்கிறார். விஜய் கட்சியில் உள்ள மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனால் கூட விஜயை பார்க்க முடியவில்லை. கட்சியின் முக்கிய நிர்வாகியையே சந்திக்காத விஜய் எப்படி மக்களை சந்திப்பார்?” எனக் கேள்வி எழுப்பினார்.

