படகு கவிழ்ந்து விபத்து.. ஒரே கிராமத்தை சேர்ந்த 6 இளைஞர்கள் பலி..
ஆந்திராவில் ஏரியை சுற்றிப்பார்க்கச் சென்றபோது படகு கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில் 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பொடலகுரு அருகே தோடேரு கிராமத்தை சேர்ந்த 10 இளைஞர்கள், அங்குள்ள ரத்தினகிரி ஏரியை சுற்றிப்பார்ப்பதற்காக மீன்பிடி படகில் சென்றுள்ளனர். படகு புறப்பட்டு சிறிது தூரம் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 10 இளைஞர்களும் தண்ணீரில் மூழ்கினர். ஏரியில் மூழ்கியவர்களில் மகேஷ், மகேந்திரன், யானை விஷ்ணுவர்தன், அட்ட கிரண் ஆகிய 4 பேர் மட்டும் நீந்தி பத்திரமாக கரை சேர்ந்துள்ளனர். ஆனால் சல்லா பிரசாந்த் (29), மண்ணூர் கல்யாண் (27), பட்டா ரகு (23), பதி சரேந்திரா (19), யாட்டம் பாலாஜி (21), அல்லி ஸ்ரீநாத் (17) ஆகியோர் 6 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் உயிரிழந்த 2 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படகில் அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றி வந்ததால் பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்து விப்பத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.