'தியாகத்திலே பிறந்து; தியாகம் செய்யவே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இஸ்லாமிய சகோதரர்கள்' - கே.எஸ்.அழகிரி பக்ரீத் வாழ்த்து..

 
ks alagiri

தியாகத்திலே பிறந்து தியாகம் செய்வதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "உலகோர் அனைவரும் ஒரே தாய் தந்தை வழி வந்தவர்கள் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய உண்மையை உணர்ந்து சகோதரத்துவம், சமாதானம், ஏகத்துவம் போன்றவற்றை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ முற்படுவதே மனித இனத்தின் குறிக்கோளாகும். இஸ்லாமியர்கள் தியாகத் திருநாளாக கொண்டாடுகிற பக்ரீத் பண்டிகை, தியாகத்தை போற்றுகிற நாளாகும். 

ஒன்றிய பாஜக அரசு இந்துத்துவா கோட்பாடுகளை பின்பற்றி அனைத்து நிலைகளிலும் பொருத்துவதன் மூலம் 20 கோடி சிறுபான்மை மக்களுக்கு எதிரான மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 45 நாட்களாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின, சிறுபான்மையின மக்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மணிப்பூர் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அங்குள்ள குடிமக்களுக்கு பாதுகாப்பு இல்லை.  இது குறித்து பிரதமர் மோடி இதுவரை ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லை.  

பாகுபாடுகளைத் தாண்டி மனித சமுதாயம் தழைத்தோங்க பிரார்த்திப்போம் : தலைவர்கள் பக்ரீத் வாழ்த்து..

சிறுபான்மையின மக்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வருகிறார்கள். இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சம உரிமை சம வாய்ப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறது.  வெறுப்பு பேச்சின் மூலம் வகுப்புவாத அரசியல் நடத்தப்பட்டு வருகிறது. மதரீதியில் மக்கள் பிளவுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.  அனைவரையும் சமமாக நடத்துவதை மக்களாட்சியின் தத்துவமாகும். அந்த முயற்சிகள் வெற்றி பெற மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும். 

தியாகத்திலே பிறந்து, தியாகம் செய்வதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற, மதக் கோட்பாடுகளைப் போற்றி பாதுகாக்கிற வகையில் வாழ்ந்து வருகிற இஸ்லாமிய சகோதரர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.