2 நாள் விடுமுறைக்குப் பின் இன்று மீண்டும் பட்ஜெட் கூட்டம்..
2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. இன்றைய தினம் பட்ஜெட் மீதான 3-வது நாள் விவாதம் நடைபெற இருக்கிறது.
தமிழக சட்டபேரவையில் கடந்த 20-ந்தேதி 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் (21-ந்தேதி) வேளாண் பட்ஜெடை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து கடந்த 23-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த விவாதத்தில் பங்கேற்று பேசி வருகிறார்கள். பின்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், கடந்த 2 நாட்கள் பேரவைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழக சட்டபேரவையில் இன்று (திங்கட்கிழமை) பட்ஜெட் மீதான 3-வது நாள் விவாதம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதன்பின்னர் பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான 3-வது நாள் விவாதம் நடக்கிறது. அதன்படி, இன்றைய விவாதத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 8 பேர் பேச உள்ளனர்.
சட்டசபையில் அடுத்தடுத்த நிகழ்வுகளாக நாளை (செவ்வாய்கிழமை) 2023-2024-ம் ஆண்டின் செலவிற்கான முன்பண மானியக் கோரிக்கையும், கூடுதல் செலவிற்கான மானியக் கோரிக்கையும் பேரவைக்கு அளிக்கப்பட்டு, விவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தொடர்ந்து, நிதி ஒதுக்குவதற்காக சட்ட மசோதா அறிமுகம் செய்து ஆய்வுக்கு பிறகு நிறைவேற்றப்படும். இன்றைய நிகவுகளின் போது, நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பதில் அளிக்கின்றனர்.