நேருக்கு நேர் பயங்கரமாக மோதிய வேன், பேருந்து
கடலூர் அருகே தனியார் பேருந்து - வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 25 பெண்கள் உள்பட 30 பேர் காயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம் மேல் பூவாணிக் குப்பம் பகுதியில் இருந்து காடாம்புலியூருக்கு முந்திரிக்கொட்டை உடைக்கும் கம்பெனிக்கு பெண்கள் வேலைக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது வடலூரில் இருந்து பெருமாள் ஏரிக்கரை வழியாக பரங்கிப்பேட்டைக்கு பயணிகளைக் ஏற்றி கொண்டு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் மேல் பூவாணிக் குப்பம் பகுதியில் பெருமாள் ஏரிக்கரையில் தனியார் பஸ்சும், வேனும் மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அருகாமையில் பெருமாள் ஏரியில் கடல் போல் நீர் காட்சியளித்து வரும் நிலையில் விபத்து ஏற்பட்ட உடன் அதில் கவிழாமல் கரையோரமாக நின்றது. தனியார் பஸ் மற்றும் வேனில் காயமடைந்த நபர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அப்பகுதி மக்கள் அனுப்பி வைத்தனர். இதில் 30-க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் 25க்கும் மேற்பட்ட பெண்கள் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதனிடையே காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிலையில் தனியார் பேருந்தும்-வேனும் மோதி கொண்ட பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பெருமாள் ஏரியின் தண்ணீர் வெளியேற்றப்படும் மதகு சாலை வழியாக பேருந்து சரியான பாதையில் சென்று கொண்டிருந்தது. சிறிது கூட அதனை பொருட்படுத்தாமல் வந்த வேன் நேராக பேருந்து மீது மோதிய காட்சிகள் பேருந்தில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


