நடிகர் தனுஷ்-க்கு எதிரான வழக்கு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 
தனுஷ்

வேலையில்லா பட்டதாரி படத்தில் புகைபிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறாதது தொடர்பான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் வரும் போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறாததால், தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு  எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசிடம் புகார் அளிக்கப்பட்டது. இதில் விசாரணை மேற்கொண்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுசுக்கு எதிராக புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  

high court

இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் விசாரணை நிறைவடந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.  வழக்கை ரத்து செய்யக் கூடாது என அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.