எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு தாக்கல்

 
eps

கோவை JM 1 நீதிமன்றத்தில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். 

EPS

நடந்து முடிந்த 2024  நாடாளுமன்ற மக்களவை தேர்தலிலும்  அதிமுக படுதோல்வியை சந்தித்ததுள்ளது. இந்த தோல்விக்கு முக்கிய காரணம் அதிமுக பல அணிகளாக பிரிந்து இருப்பது என கூறப்படும் நிலையில் மீண்டும் அதிமுகவை ஒன்றிணைக்க ஓ.பி.எஸ். ஆதரவாளர்களான புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகர், மற்றும் எந்த அணியையும் சாராத கே.சி.பழனிச்சாமி ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி, சசிகலா, தினகரன், உள்ளிட்டோருடன் பேச்சு வார்த்தை மேற்கொள்ள முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒருங்கிணைப்பு குழுவை கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக ரோட்டில் போவோர் ஒருங்கிணைப்பு குழு என்று ஆரம்பித்தால் அதற்கு பதில் சொல்ல வேண்டுமா? கோவையை சேர்ந்த நபர், ஓ.பி.எஸ். இருந்த போது கட்சி சேர்க்கப்பட்ட நபர், அதற்கு முன் கட்சியிலேயே இல்லாத  ஒரு நபர் இந்த குழுவில் உள்ளார் என தெரிவித்தார்.

இந்நிலையில் தன்னை பற்றியும், ஒருங்கிணைப்பு குழுவை பற்றி அவதூறான கருத்துகளை தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி கோவை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு வழக்கு மனு தாக்கல் செய்தார். இந்த  மனு வரும் 26 ம் தேதி விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.