பழங்குடியின ஊராட்சி தலைவர் மீது சாதிய அடக்குமுறை..! நடவடிக்கை எடுக்க தயங்கிவது ஏன்? - ராமதாஸ் கேள்வி..
பழங்குடியின ஊராட்சித் தலைவர் மீது சாதிய அடக்குமுறையை கட்டவிழ்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்குவது ஏன்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் சமூக வலைதள பதிவில், “விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் ஆனாங்கூர் ஊராட்சி மன்ற தலைவரான பழங்குடியினத்தை சேர்ந்த சங்கீதா மீது அந்த ஊராட்சியின் துணைத்தலைவர் சித்ரா குணசேகர், உறுப்பினர் சுதா சரவணன் ஆகியோர் சாதிய அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்ட நிலையில், அதைக் கண்டித்து போராட்டம் நடத்திய சங்கீதாவுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கடந்த 3-ஆம் தேதி நான் வலியுறுத்தியிருந்த சூழலில், தொடக்கத்தில் அதை மறுத்த மாவட்ட ஆட்சியர் பழனி, அதன்பிறகு தான் சங்கீதாவை அவருக்கான இருக்கையில் அமர்த்த நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் கூட, அவர்களுக்கான அதிகாரத்தையும், உரிமையையும் பெற கடுமையாக போராட வேண்டியிருக்கிறது என்பதையும், பா.ம.க. தலைமையிலிருந்து அழுத்தங்கள் வந்தால் தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூகநீதி கிடைக்கிறது என்பதையும் இந்த நிகழ்விலிருந்து அறிய முடிகிறது.
இத்தனைக்கு பிறகும் கூட சங்கீதாவுக்கு முழுமையான நீதி கிடைக்கவில்லை. அவர் மீது சாதிய வன்கொடுமைகளை கட்டவிழ்த்து விட்ட ஊராட்சித் துணைத் தலைவர் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக ஊராட்சித் தலைவர் சங்கீதா அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து 10 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? என்பதை மாவட்ட நிர்வாகம் விளக்க வேண்டும். சட்டப் போராட்டம் மற்றும் அரசியல் போராட்டத்தின் மூலம் தான் சங்கீதாவுக்கு முழுமையான நீதி கிடைக்கும் என்றால் அதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி தயாராகவே இருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.


