காவிரி விவகாரம் - சீமான் இன்று ஆர்ப்பாட்டம்
காவிரி விவகாரத்தில் ஒன்றிய, கர்நாடக, தமிழ்நாடு அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
காவிரியில் கடந்த மாதம் 29ஆம் தேதி 5 ஆயிரம் கன அடி நீரை 15 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 12ஆம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி திறந்து விட உத்தரவு பிறப்பித்த நிலையில், இதை ஆணையமும் ஏற்றுக் கொண்டது. ஆனால் இதற்கு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்தது. காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் ஆணையத்தின் உத்தரவினை கர்நாடக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
இறுதியாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு பிலிகுண்டுவில் காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீரை செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் இவற்றையெல்லாம் கர்நாடகா அரசு ஏற்க மறுத்தது.
இந்நிலையில் காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகிறார். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் ஒருங்கிணைந்து, திட்டமிட்டு களப்பணியாற்றி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.