திருவாரூர் மாவட்டத்தில் பயிர்சேதம் குறித்து மத்தியக் குழு ஆய்வு..
டெல்டா மாவட்டங்களில் நெல் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் 2வது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்..
டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. பயிர் சேதம் குறித்து மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ள நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று பயிர் சேதம் குறித்து ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட மத்திய அரசு குழு தமிழகத்திற்கு வருகை தந்துள்ளது. நேற்றைய தினம் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட இந்தக் குழு, இரண்டாவது நாளாக இன்று திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ரிஷியூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா தாவடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ள நிலையில் மதிய குழுவினர் ஆய்வு செய்து விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டு அறிந்தனர் ரிஷியூரை தொடர்ந்து அரிச்சாபுரம், துண்டாகட்டளை, கீழப்பாலம், கண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். ஆய்வின்போது விவசாயிகளின் குறைகளை கேட்டு அறிந்து வரும் அதிகாரிகள், சேதமடைந்த நெல் மட்டும் பயிர்களை ஆய்வு செய்து அதன் மாதிரிகளை தமிழ்நாடு உணவு பரிசோதனை கூடத்தில் ஆய்வு மேற்கொண்டு மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பிக்க உள்ளதாக தெரிவிக்கின்றனர்.