தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி வலுவாக உள்ளது - எல்.முருகன் பேட்டி

 
L Murugan

அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த பிரச்சினையுமில்லை, கூட்டணி வலுவாக உள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை உள்ளிட்ட 9 தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். குமரி, கோவை, நீலகிரி, நெல்லை, வேலூர், ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம் தொகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக கூட்டணி குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதில் எந்த சர்ச்சையும் இல்லை. அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த பிரச்சினையுமில்லை, கூட்டணி தொடர்கிறது. 

அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக உள்ளது.  தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் கட்சி தலைவர்களாக இருந்தவர்கள் தங்களது பங்களிப்பை அளித்து கட்சியை சிறப்பாக நடத்தினர். இந்திய அளவில் 150 தொகுதிகளை கட்சி மேலிடம் அடையாளம் கண்டுள்ளது. அங்கு வெற்றி பெற அதிக கவனம் செலுத்தப்படுகிறது. கட்சியின் மேலிடத்தின் வழிகாட்டுதலின்படி எங்களது பணி தொடரும். இவ்வாறு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.