டெல்லியில் எம்.பி.சுதாவிடம் செயின் பறிப்பு: உயர் பாதுகாப்பான சாலையில் நடந்தது எப்படி ?? அமித்ஷாவுக்கு கடிதம்..
தமிழ்நாடு எம்.பி-க்கள் டெல்லியில் நடைப்பயிற்சி மேற்கொண்ருந்த போது காங்.எம்.பி சுதா-விடம் கொள்ளையர் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டிருப்பதால் தமிழக எம்.பிக்கள் பலரும் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருக்கிறார். அந்தவகையில் காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை மக்களவை உறுப்பினராக இருப்பவர் சுதா எம்.பி. டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கி நாடாளுமன்ற அலுவல் நாட்களில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலயில் இன்று காலை வழக்கம் போல் அவர் டெல்லி சாணக்கியபுரி சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அவருடன் மற்றொரு தமிழக எம்.பி-யான ராஜாத்தியும் இன்று நடைபயிற்சி சென்றுள்ளார். போலாந்த் நாட்டின் தூதரகதிற்கு அருகே எம்.பி.க்கள் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் எம்.பி சுதாவின் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார்.

ஹெல்மெட் அணிந்து கொண்டு எதிர் திசையில் மெதுவாக வந்து பின்னர் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதில், எம்.பி கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டதுடன், அவர் அணிந்த உடையும் கிழிந்துள்ளது. இதுகுறித்து எம்.பி சுதா சாணக்கியா பூரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அத்துடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் கடிதம் எழுதியுள்ளார். உயர் பாதுகாப்பு கொண்ட பகுதியில் நடைபயணம் மேற்கொண்ட போது தன்னுடைய 4.5 சவரனுக்கும் அதிகமான தங்க சங்கிலி பறித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், குற்றவாளியை கண்டுபிடித்து உடனடியாக கைது செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தன்னுடைய தங்கச் சங்கிலி கண்டுபிடிக்கப்பட்டு விரைந்து நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் எம்.பி சுதா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


