தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

 
rain

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோல் நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோல் 02.03.2023 மற்றும் 03.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். 04.03.2023: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

rain

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 - 23 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, ராமநாதபுரம் மாவட்டம் வலிநோக்கத்தில் 2 செண்டி மீட்டர் மழையும், மண்டபம் மற்றும் ராமநாதபுரத்தில்  தலா1 ஒரு செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.