அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நேற்று ( ஜூன் 5) மாலை உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே இடத்தில் நிலவுவதாகவும், இது வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அத்துடன், தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று ( 06.06.2023) முதல் ஜூன் 10 வரை 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி கடலூர், தர்மபுரி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கேற்ப சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.