சவுக்கு சங்கரும் அதே வீடியோவை வெளியிட்டார்! முடிந்தால் என்னையும் கைது செய்யுங்கள் என ஆவேசம்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று முன்தினம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையில் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகுதி வாய்ந்த குடும்பங்களில் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது என்று அறிவித்தார்.
மத்திய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டு இருக்கும் சமையல் எரிவாயு விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு பேருதவியாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லை என்று அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர் . தமிழக அரசின் இந்த அறிவிப்பை கிண்டலடிக்கும் விதமாக நடிகர்கள் கவுண்டமணி -செந்தில் நடித்த படத்தின் காமெடி காட்சிகளோடு ஒப்பிட்டு சவுக்கு சங்கரின் ஆதரவாளரும் வாய்ஸ் ஆப் சவுக்கு சங்கர் என்ற டுவிட்டர் தளத்தில் அக்கவுண்டை வைத்திருக்கும் பிரதீப் வெளியிட்டு இருந்தார்.
சவுக்கு சங்கரும் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனால் இந்த டுவிட்டர் கணக்குகளை முடக்க கோரியும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரியும் மதுரை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. பெண்களை விமர்சித்து வெளியிட்ட சவுக்கு சங்கர் ஆதரவாளர் பிரதீப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் ஆணையம் சார்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
இதை அடுத்து நேற்று நள்ளிரவு பிரதீப் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் சவுக்கு சங்கர். நானும் இந்த வீடியோவை பதிவு செய்திருக்கிறேன் முடிந்தால் என்னையும் கைது செய்யுங்கள் என்று ஆவேசப்பட்டு இருக்கிறார்.
It is @ptrmadurai who has mounted pressure on @CMOTamilnadu and @chennaipolice_ to arrest @voiceofsavukku admin. He thinks no one should criticise his lacklustre budget. Shame on this govt. https://t.co/cbsOVX4bUg
— Savukku Shankar (@Veera284) March 22, 2023