சென்னை விமான நிலையம் மூடல் - இரவு 11 மணி வரை விமான சேவைகள் ரத்து!

 
airport

கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இரவு 11 மணி வரை விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும்  தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கியுள்ளன. பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும்  பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சாலைகள் போக்குவரத்து செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதேபோல் சென்னை விமான நிலையத்திலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 


இந்த நிலையில், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இரவு 11 மணி வரை விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதேபோல் விமான ஓடுதளங்களிலும் மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில், இரவு 11 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாகவும், விமான சேவைகள் அதுவரை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.