ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க வேண்டும் - காவல்துறைக்கு உத்தரவு
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுதும் 50 இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி காவல்துறையிடம் ஆர்.எஸ்.எஸ். மனு அளித்த நிலையில், ஆனால் காவல்துறை அனுமதி வழங்க மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நிபந்தனைகளுடன் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க, போலீசாருக்கு உத்தரவிட்டது. ஆனால், சட்டம்- - ஒழுங்கு பிரச்னையை காட்டி அணிவகுப்புக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதனையடுத்து ஆர்.எஸ்.எஸ். தரப்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது .
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சுற்றுச்சுவருடன் இருக்கும் உள்ளரங்கு நிகழ்வாக, அணிவகுப்பை நடத்தலாம் என்ற, நிபந்தனையுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் இருதரப்பு வாதம் முடிவடைந்த நிலையில் கடந்த 25ம் தேதி மேல்முறையீட்டு வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இந்நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், தமிழகத்தில் சுற்றுச்சுவருடன் கூடிய உள்ளரங்கு நிகழ்வாக, ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பை நடத்துமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்ததோடு, அணிவகுப்புக்கு அனுமதி கேட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு மீண்டும் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பங்களை சட்டப்படி பரிசீலித்து போலீஸ் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிகளை கடுமையான ஒழுங்குடன் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.