இரட்டை இலை - காலக்கெடு நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
இரட்டை இலை குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
உட்கட்சி பூசல் காரணமாக அதிமுக பல்வேறு அணிகளாக பிளவுபட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓபிஎஸ் அணி, சசிகலா அணி, டிடிவி தினகரனின் அமமுக என பல அணிகளாக உள்ளன. இதனிடையே அதிமுக சின்னம், கொடி தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. இருப்பினும் அதிமுக உட்கட்சி தொடர்பாக பல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பம் மீது ஓபிஎஸ் உள்பட அனைத்து தரப்பினரின் கருத்தை தேர்தல் ஆணையம் கேட்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனு மீது தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது என்று அளித்த விண்ணப்பம் மீது 4 வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 8 வாரம் கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி சூரியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த நிலையில், காலக்கெடுவை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.


