30 ஆண்டுகளுக்கு பின் ட்ரெண்டாகிறது! இதனால் இளையராஜா எப்படி பாதிக்கப்படுகிறார்?- நீதிபதி சரமாரி கேள்வி
சமீபத்தில் வெளியான *Dude* திரைப்படத்தில் தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ள பாடல்களை நீக்கக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

தீபாவளிக்கு வெளியான Dude திரைப்படத்தில், தனது இசையமைப்பில் வெளியான புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த, கருத்த மச்சான் மற்றும் பணக்காரன் படத்தில் இடம்பெற்றிருந்த 100 வருஷம் இந்த மாப்பிள்ளைக்கு ஆகிய பாடல்களை தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், படத்தில் இடம்பெற்றுள்ள இந்த இரண்டு பாடல்களையும் நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கானது, நீதிபதி என். செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, 30 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த பாடல்களை தற்போது கேட்டு ரசிக்கின்றனர். இதனால் இளையராஜா எப்படி பாதிக்கப்படுகிறார் எனவும், பழைய பாடல்களை பயன்படுத்துவது தற்போது ட்ரெண்டாகி வருவதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்து வாதிட்ட இளையராஜா தரப்பு மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், தனது அனுமதி இல்லாமல் பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் இந்த பாடல்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தனது பாடலை உருமாற்றி உள்ளனர். பாடலுக்கான உரிமை தங்களிடம் உள்ளது. அதனால், படத்திலிருந்து பாடலை நீக்கியும், பாடலுக்கு தடை விதித்தும், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அப்போது Dude பட தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் ஆஜராகி இருந்த வழக்கறிஞரிடம் நீதிபதி செந்தில்குமார், தொடர்ச்சியாக மனுதாரரின் பாடல்களை பதிப்புரிமையை மீறி பயன்படுத்துவது ஏன் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த Dude திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், பாடல்களின் உரிமையை எக்கோ நிறுவனத்திடமிருந்து சோனி நிறுவனம் பெற்றிருந்ததாகவும், சோனி நிறுவனத்திடம் இருந்து இந்த பாடல்களை படத்தில் பயன்படுத்துவதற்கான அனுமதியை பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். இப்போதைய இளையராஜா தரப்பில் ஏற்கனவே எக்கோ நிறுவனம் பயன்படுத்த இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளதாக சுட்டிக்காட்டினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, படம் திரையரங்கிலும் ஓ டி டி தளங்களிலும் வெளியாகும் வரை அமைதியாக இருந்துவிட்டு தற்போது இந்த வழக்கை தாக்கல் செய்தது ஏன் என இளையராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர், ஏற்கனவே இது சம்பந்தமாக தயாரிப்பாளர் தரப்பிற்கு நோட்டீஸ் அனுப்பிய போது, அதுபோல எந்த நபரும் இல்லை என்று நோட்டீஸ் திருப்பி அனுப்பப்பட்டதாக புகார் தெரிவித்தார். வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீது உத்தரவு பிறப்பிப்பதற்காக தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.


