சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு சிஇஓ நியமனம்!!
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்ல மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தென் மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய மக்கள் மாநகரப் பேருந்துகள் மூலமாக சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். அதேபோல தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய மக்கள் மாநகர பேருந்துகள் மூலமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தடைந்து அங்கிருந்து ஊருக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் நில நிர்வாக ஆணையரகத்தில் இணை ஆணையராக இருந்த ஜெ.பார்த்திபனை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு தலைமை நிர்வாக அலுவலராக நியமித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். கிளாம்பாக்கம் மற்றும் குந்தம்பாக்கம் பேருந்து நிலையங்களை நிர்வகிக்க, தலைமை நிர்வாக அலுவலராக பார்த்திபன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.