அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும்....சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு - பாலச்சந்திரன் பேட்டி

 
Balachandran

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். 

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதனிடையே சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இடி மின்னல்,  சூறைக்காற்றுடன் பெய்த  கனமழை காரணமாக சென்னையில் பிரதான சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சுரங்கப்பாதைகளில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது.  மரங்கள் மற்றும் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

rain

இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: அடுத்த 3 தினங்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை தொடரும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் மழை தொடரும். 1996-ம் ஆண்டுக்கு பிறகு ஜூன் மாதத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது என அவர் கூறியுள்ளார். இதனால், 27 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூனில் சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது. கனமழையை பொறுத்தவரையில் அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, டெல்டா மாவட்டங்கள், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது.