ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதையின் விரிவாக்கப் பணிகள் - சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்..

 
metro

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதையின் விரிவாக்கப் பணிகள் குறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.  

இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், “​சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை பணிகள் குறித்த சமீபத்திய அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக விவாதங்களை தெளிவுபடுத்த விரும்புகிறது.

​டிசம்பர் 2023-இல் மிச்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ளம் ஒரு முக்கியமான பிரச்சனையை எடுத்துக்காட்டுகிறது: அதிக மழைப் பொழிவை தாங்கும் திறன் இல்லாத நிலையில் உள்ள தற்போதைய ஒக்கியம் மடுவு பாலத்தில் நீர்வழிப்பாதை தற்போது சுமார் 80 மீட்டர் நீளமும், அதன் உயரமும் குறைவாகவே உள்ளது. இதனை சரி செய்யும் பொருட்டு தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நீர்வழிப்பாதையை 200 மீட்டர் நீளத்திற்கும், கூடுதலாக 1.5 மீட்டர் உயர இடைவெளியுடனும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. 

ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதையின் விரிவாக்கப் பணிகள் - சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்.. 

​நீர்வளத் துறையின் வேண்டுகோளின் படி, இந்த முக்கியமான பணிகள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்க அகலமான நீர்வழிப்பாதையுடன் புதிய பாலம் கட்டிய பின்னர், தற்போதுள்ள பாலத்தை இடித்து அகற்றும் பணியும் இதில் அடங்கும்.

​சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் இந்த முக்கியமான நீர்வழிப்பாதை பற்றிய பொதுமக்களின் அக்கறையை கருத்தில் கொண்டு, தற்போதைய இந்த பணி மழைநீர் வெளியேற்றும் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் ஒக்கியம் மடுவுக்கு குறுக்கே நீர்வழிப்பாதையை 200 மீட்டராக அகலப்படுத்தும் சாலைப் பணியாகும். இதனால் அடுத்த பருவமழையில் (வரவிருக்கும் பருவமழை அல்ல) அதிகரிக்கப்பட்ட நீர்வழிப்பாதை கொண்டபாலம் தயாராகும்.

வரும் பருவமழைக்கு பின்னர், அடுத்த பருவமழைக்கு முன் இந்தப் பணியை முடித்து, ஓக்கியம் மடுவுபாலம் எதிர்கால கனமழையை சிறப்பாக தாங்கும் திறன் கொண்டதாக கட்டமைக்கப்படும். தற்போதுள்ள பணிகள் எதிர்வரும் பருவமழைக்கு முன்னர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, தற்போதுள்ள நீர்வழிப்பாதைமடுவின் அடித்தள நிலை வரை சரிசெய்யப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.