சென்னை மாமன்ற உறுப்பினர் ஆலப்பாக்கம் சண்முகம் மயங்கி விழுந்து பலி..
சென்னை மாநகராட்சியின் 146 வார்டு மாமன்ற உறுப்பினர் ஆலப்பாக்கம் கு.சண்முகம் இன்று காலை 9 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் இன்று அமைதி பேரணியில் ஈடுபட்டனர். ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் , அங்கிருந்து தொடங்கிய பேரணியை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம் வரை நடைபெற்றது.
இந்நிலையில் கலைஞர் நினைவு நாள் அமைதிப் பேரணியில் சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், 146வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ஆலப்பாக்கம் சண்முகம் பங்கேற்றிருந்தார். அப்போது காலை 9 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் இயற்கை எய்தினார். கலைஞரின் நினைவு நாளில், அமைதிப்பேரணியில் பங்கேற்றபோது திமுக வார்டு உறுப்பினர் உயிரிழந்த சம்பவம் கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.