சென்னையில் நாளை 10 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் - சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு..

 
 குடிநீர் வாரியம்


செம்பரம்பாக்கம் ஏரியில் மதகு பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை  சென்னையின் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.   

இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “செம்பரம்பாக்கம் ஏரி மதகு பராமரிப்பு பணிகளை நீர்வளத்துறையினர் மேற்கொள்ள உள்ளனர். இதன் காரணமாக அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு , பல்லாவரம், பம்மல் மற்றும் அனகாபுத்தூர் மண்டலங்களில் ஜூலை 31-ந் தேதி காலை 8 மணி முதல் ஆகஸ்ட் 1-ந்தேதி காலை 8 மணி வரை செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

சென்னை குடிநீர் வாரியம்

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளில் குடிநீர்த் தொட்டி மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும். குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி, வழக்கம் போல மேற்கொள்ளப்படும். மேலும், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம், பம்மல் மற்றும் அனகாபுத்தூர் பகுதிகளுக்கும் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.