குடிநீர் வரியை இனிமேல் ரொக்கமாக செலுத்த முடியாது - சென்னை குடிநீர் வாரியம்

 
water

சென்னை மக்கள் குடிநீர் வரியை ரொக்கமாக செலுத்த கூடாது எனவும் டிஜிட்டல், காசோலை, வரவோலை மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும் எனவும் சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி, கட்டணங்கள் ரொக்கமாக பெறப்பட மாட்டாது. குடிநீர் வரியை இ-சேவை மையங்கள், டிஜிட்டல், காசோலை அல்லது வரைவோலைகளாக மட்டுமே செலுத்த வேண்டும். பணிமனை அலுவலங்களில் தற்போது செயல்பட்டு வரும் வசூல் மையங்கள் அக்டோபர் மாதம் 1 முதல் செயல்படாது.

குடிநீர் வரி, கட்டணங்கள், காசோலை, வரைவோலைகளாக செலுத்தும் வகையில் நுகர்வோரின் வசதிக்காக அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்களில் பெட்டிகள் வைக்கப்படும். டிஜிட்டல் கட்டண முறையை ஊக்குவிக்கவும், வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.