கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு.. குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்குக - இபிஎஸ்..
எழும்பூர் மருத்துவமனையில் கை அகற்றப்பட்டு உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஒன்றரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. தவறான சிகிச்சை காரணமாக வலது கை அகற்றப்பட்டதாக பெற்றோர் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்த நிலையில், குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “கடந்த சில வாரங்களுக்கு முன்பு எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இந்த விடியா அரசின் அலட்சியத்தால் கை அகற்றப்பட்ட குழந்தை தற்போது உயிரிழந்துவிட்ட செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன், அன்புக் குழந்தையை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையையும் தெரிவித்துக் கொள்கிறேன்,இந்த துயர நிகழ்விற்கு என் கடுமையான கண்டனங்கள்
மேலும் குழந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், அக்குடும்பத்தை சார்ந்த ஒருவருக்கு அரசு வேலைவாய்பினையும் வழங்க வேண்டுமென வலியுறுத்ததுகிறேன். அலட்சியம் அக்கறையின்மைக்கு உதாரணமாக இருக்கும் இந்த விடியா ஆட்சியில் பச்சிளம் குழந்தைக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பதையும், மக்களை காக்கும் கடமையில் இருந்து இந்த அரசு ஒவ்வொரு நாளும் தவறிச் செல்வதையும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிருபணம் செய்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.