துப்பாக்கி குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் மரணம்
May 19, 2024, 11:25 IST1716098135000
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியானார்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரவி கிரண் (37) பாதுகாப்புப் பணியில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் ரவி கிரண் இரவு பணி முடிந்து சக வீரர்களுடன் பேருந்தில் வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது பேருந்து வேகத்தடையின் மீது ஏறி இறங்கியுள்ளது. இதில் ரவி கிரண் கொண்டு வந்த துப்பாக்கி எதிர்பாராத விதமாக வெடித்ததில், குண்டு கிரண் கழுத்தில் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
எதிர்பாராமல் துப்பாக்கி வெடித்ததா அல்லது தற்கொலையா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


